Sunday, January 1, 2012

அம்பலத்தார் அம்மானை பகுதி 2

அம்பலத்தார் அம்மானை- பகுதி 2
சிவமயம்

அம்பலத்தார் அம்மானை- புனைவு-2

8.  ஊமை மொழி
ஒன்றுமே பேசாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் ஒருவரைப் பற்றி ஆயிரக்கணக்கான பேர் கூடை கூடையாகப் பேசியும் பாடியும் இருக்கிறார்கள். நமக்கு நன்கு பரிச்சயமான அவரைப் பற்றிய துதி ஒன்றையும்( http://www.hindudevotionalblog.com/2008/09/dakshinamurthy-ashtakam-dakshinamurti.html ), இசை ஒன்றையும் ( http://shivkumar-dakshinamurthe-detailed-mp3-download.kohit.net/_/351542 ) கேட்டவாறே நான் சும்மாஅமர்ந்திருக்கையில், பாடல்நல்லூர்ப் பெண்களின் அம்மானை ஆட்டம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

உடனே எழுந்து அருகில் சென்று அவர்கள் உரையாடலுக்குக் காது கொடுக்கலானேன். கணீரென்று, அக்காலத்தில் செம்பாலைப் பண் என்று வழங்கப்பட்ட சங்கராபரண இராகத்தில், சமத்காரவல்லிப் பெண் ஒரு அம்மானைச் செய்யுளின் முதல் இரு அடிகளைத் தொடுத்துப் பாடலானாள், பாடலின் ஓட்டத்திற்கேற்ப அம்மானைக் காய்களைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் தன் செயலைப் அற்புதமாக இசைக்கவும் செய்தாள்:
 ஆலின் நிழலில் அமர்ந்தெங்கள் ஐயன்உயர்
சீலநெறி சைகையினால் தான்விளக்கும் அம்மானை

எங்கள் சிவபெருமானின் பெருமையைத்தான் என்னவென்று சொல்வேனடி, சூரவல்லி?

கப்பும் கிளையும் விழுதுகளுமாக அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னார்க் கிருக்க நிழலாகும்வண்ணம் பரந்து நிற்கும் ஒரு பெரிய ஆலமரத்தடியில் இப்போது எம் இறைவர் ஒரு மேடையின் மீதமர்ந்திருக்க, அவரைச் சுற்றிலும் அவரை விட வயதான நான்கு பேர் தரையில் அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் யாவர் தெரியுமா? தன் படைப்புத் தொழிலைத் தொடங்கிய பிரமனால் முதலில் சிருஷ்டிக்கப் பெற்ற சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு சிறுவயதினரே அவர்கள். 

தம்மைப் படைத்த தந்தையான பிரமன் வாயால், மெய்ப்பொருளாகிய பரப்ரும்மத்தை அறிவதுதான் வாழ்க்கையின் இலட்சியம் என்று கேட்ட மறுகணமே அவர்கள் உலகப் பற்றைத் துறந்துஅப் பேருண்மையை அறிந்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

அப்போது, ஞானமூர்த்தியாகிய சிவபிரான் தக்ஷிணாமூர்த்தி என்னும் குருவடிவில் ஆலின் அடியில் ஒரு மேடையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரடிக் கீழ் மெய்ப்பொருள் விளக்கம் கேட்க உட்காருகிறார்கள்.

அஞ்ஞானமென்னும் அரக்கனைக் காலடியில் அடக்கி வைத்து அமர்ந்துள்ள எம் ஐயன், தமது வலது கையின் விரல்களால் சின்முத்திரை என்னும் அடையாளத்தைக் காட்டித் தமது சீடர்களுக்கு உபதேசம் செய்து அவர்களுக்கு மெஞ்ஞானத்தையும் அதை அடையும் உயர்ந்த வழியையும் புகட்டுகிறார்.

இம்மாதிரியான ஆசான்-சீடர் குழுவையும் பாடஞ் சொல்லும், கேட்கும் முறையையும் வேறெங்கும் நீ கண்டதுண்டோடீ? இது அற்புதத்திலும் அற்புதம் அல்லவோடீ?” என்று ஆனந்தத்தால் விளைந்த உற்சாகம் கொப்பளிக்கப் பேசிக்கொண்டு, இன்னும் மென்மேலே பேசவிருந்த சமத்காரவல்லியை, “ஊக்ஹூம்என்ற சூரவல்லியின் பெருத்த கனைப்பு, விரைந்தோடும் தேரடியில் இட்ட முட்டுக்கட்டை போலச் சடாரென்று நிறுத்தியது.

தன் கனைப்பைத் தொடந்து சூரவல்லி வழக்கம் போலத் தன் அங்கதம் (கிண்டல்) தோய்ந்த கேள்வியை எடுத்து வீசினாள்:
என் அருமைத் தோழியே! என்னை மன்னித்துக் கொள்ளடி. தெரியாமல் தான் இதைக் கேட்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ளாதேஎன்பதாகத் தன் முகபாவனை வழியாகப் பீடிகை போட்ட சூரவல்லி,

ஆமாமடி, நீ சொல்வதைக் கேட்டால், இது பெரிய அதிசயம் தான்! மெய்ப்பொருளை அறியத் துடித்துக் கொண்டிருக்கும் தமது சீடர்களுக்கு உபதேசம் செய்ய வந்த குருவானவர் வெறும் கைச் சைகையினால் மட்டும் எதையோ செய்ய முயல்வதைப் பார்த்தால், உங்கள் ஐயன் வாயால் ஏதும் பேச முடியாத ஊமையராக இருப்பார் போலத் தெரிகிறது. ஐயோ பாவம்! இது என்ன பரிதாபம்!என்னும் பொருள்படும் படியாக,

சீலநெறி சைகையினால்  தான்விளக்கும் ஆமாயின்
ஓலமெதும் செய்யாத ஊமையுமோ அம்மானை?
என்ற அம்மானையின் பின்னிரு அடிகளைப் பாடினாள் சூரவல்லி.
இதைக் காதால் கேட்ட சமத்கார வல்லிக்கு எப்போதும் போல வரும் எரிச்சல் இன்று எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது போலத் தோன்றியது. மாறாக, அமைதி தவழும் அழகிய முகத்துடன் மிகவும் மென்மையான குரலில், சூரவல்லியின் கேள்விக்குத் தன் விடையாகப் பாடலின் ஈற்றடியை விடுத்தாள்:
சாலம்செய்(து) ஊமைமொழி உள்ளுரைக்கும் அம்மானை!
நீ சொல்வது மெத்தவும் சரியடி சூரவல்லி. இந்த வகுப்பில் எம் இறைவனார் ஒரு மாய வித்தையைச் செய்ததை அழகாகக் கண்டு பிடித்து விட்டாய்.

வழக்கமாக நாம் காண்பது போல, ஆசிரியர் தம் வாயால் பேசிக்கொண்டு போவதும், அதைக் காதால் கேட்கும் சீடர்கள் பலர் அது புரியாததனாலோ அல்லது கவனக் குறைவாலோ ஆசானின் உரையை உள்வாங்கிக் கொள்ளாமல், வெளியில் காற்றில் பறக்க விட்டு விடுவதும் எங்களவர்க்கு நன்கு தெரியும்.

ஆகவேதான் வாயினால் ஏதும் மொழியாமல், தாம் கையால் காட்டும் சமிஞ்ஞை ஒன்றே நேராகத் தம் சிஷ்யர்களின் சிந்தையில் போய் அங்கு மெய்ப்பொருளை உணர்த்தும்- வித்தையை/விந்தையை நிகழ்த்துகிறார்!

இவ்வாறு குருவின் வாய் அனுஷ்டிக்கும் மௌனம்சீடர் நெஞ்சை ஊடுருவிப் போய் அங்குப் பேசும்அதிசயம் எங்குமே நிகழ்ந்த்தில்லைஎன்று கூறிய சமத்காரவல்லியின் கண்கள் பனிக்கத் தொடங்கின, மேலே ஏதும் பேசாமல், மௌனமாய் அம்மானைக் காய்களை மெல்லத் தரையில் இட்டு வீட்டிற்குள் சென்றாள் அவள்.

மறைவாய் அருகில் நின்று இவ்வளவு நேரம் இதைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கும் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து உருகுவதைப் போன்ற உணர்வு ஏற்பட நானும் அங்கிருந்து அகல்கிறேன்.....
முழுப்பாடல் கீழே:
ஆலின் நிழலில் அமர்ந்தெங்கள் ஐயன்உயர் 
சீலநெறி சைகையினால் தான்விளக்கும் அம்மானை;
சீலநெறி சைகையினால்  தான்விளக்கும் ஆமாயின்
ஓலமெதும் செய்யாத ஊமையுமோ அம்மானை?
சாலம்செய்(து) ஊமைமொழி உள்ளுரைக்கும் அம்மானை!
குறிப்பு: சாலம்: ஜாலம், மாய வித்தை; பெருமை.
முன்னுரையில் குறிப்பிட்ட ஆதி சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்துதியில், பிரவணப் பொருளை எடுத்துரைக்கச் சிவன் நடத்தும் வகுப்பின் விசித்திரத் தன்மையை நகைச்சுவையும் பொருட்சுவையும் கொண்ட ஸ்லோகங்களால் விளக்குவதைக் காணலாம்.
----------------------------------------------------------------------------------------------------------
9. சீர் தருவோன்
நம் அம்மானைப் பெண்கள் வதியும் பாடல்நல்லூர் ஒரு அழகிய சிறு கிராமம். சுமார் ஒன்பது, பத்துத் தெருக்களே உள்ள அவ்வூரையும் அதன் அமைப்பையும் பார்த்தாலே அங்கு இறைவனின் ஸாந்நித்தியம் இருக்கிறதென்று நம் உள்ளுணர்வுக்குத் தெரிந்து விடும்.

அதற்கேற்ப, கூத்தப்பிரானின் கோயில் ஒன்று கிழக்குத் தெருவின் ஒரு கோடியில் காண்போரை ஈர்க்கும் எழிலுடன் நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கலாம்.

எல்லா வீட்டு முன்புறங்களிலும் பசுஞ்சாணி போட்டு  மெழுகி, கலை உணர்வோடு தெருவில் இட்டுள்ள கோலங்களும், வீடுகளின் உள்ளே காணும் அலங்காரங்களும் இவ்வூரில் பெண்களின் கை மேலோங்கி நிற்கிறது என்று சொல்வதைப் போலத் தோன்றும்.

கச்சேரி அரங்குகள் போல நுழை வாசலின் இருபுறமும் அமைந்த திண்ணைகளும், அதன் மேலமர்ந்து பல்வகை விளையாட்டுக்களைப் பயிலும் பெண்டிர் கூட்டமும் இந்தக் கருத்தை மேலும் வலுவாக்கும். பாவாடை-சட்டை அணிந்த இளம் சிறுமியர் ஆடும் அம்மானை ஆட்டம் அவ்விளையாட்டுகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதையும் நாம் பார்க்கலாம்.

அம்மானையின் போது அவர்கள் பாடும் பாடலின் இசை, பொருள், சுவை ஆகியவற்றை வைத்தே அவ்வூருக்குப் பாடல்நல்லூர் என்ற பெயர் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

(ஊரில் குடிகொண்டுள்ள அருள்பொழிகண்ணியாள் உடனுறை மாதொருபாகனார் என்னும் திருநாமங்கொண்ட சிவபிரான் பற்றிய துதிப் பாடல்கள் ஏதும் வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.)
பாடல்நல்லூரில் இப்போது என்ன நடக்கின்றதென்பதைச் சற்றுப் பார்ப்போம்.
இதற்கு முன் நாம் கேட்ட அம்மானைப் பாடலின் இறுதியில், மன நெகிழ்ச்சியோடு வீட்டிற்குள் சென்ற சமத்காரவல்லிப் பெண், தொலைவில் நாதஸ்வர ஒலி வருவதைக் கேட்டு வாசலுக்கு வந்து பார்க்கிறாள்.
தெருக்கோடியில், நாதஸ்வர இன்னிசையும் தவிலின் முழக்கமும் ஒலிக்க, அருள்பொழிகண்ணியாள் சமேதனாக மாதொருபாகனார் ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருவதைக் கண்ட அவள் மெய்ம்மறந்து நிற்கிறாள். (ஒரு நிமிடம் கண்னை மூடி நாமும் அந்தப் பெருமானையும் பிராட்டியையும் நெஞ்சத் திரையில் பார்த்து மகிழ்வோம்).
தெருவில் வாரானோ, என்னைச் சற்றுத் திரும்பிப் பாரானோ நடராஜன் என்ற முத்துத் தாண்டவர் இயற்றிய கமாஸ் ராகப் பாடலை நாதஸ்வரக் கலைஞர் அமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்க, அம்பாளும் சுவாமியும் நம் அம்மானைப் பெண்களுக்கும் தெருவில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஆனந்த தரிசனம் கொடுத்துவிட்டு அடுத்த தெருவிற்குள் நுழைகிறார். 
எம்பிரானை நினைந்தவாறே வீட்டுத் திண்ணைக்கு வந்து அமர்ந்த சமத்காரவல்லி, ஒரு பாடலைத் தொடங்கப் போகிறாள் என்பதற்கான அறிகுறி தெரிகிறது. அதனால் நாமும் விரைந்து அவ்வீட்டருகில் சென்று ஒட்டுக் கேட்கத் தயாராவோம்.
ஊர்வலம் செய்வதன் மூலமாக சிவலோக நாதன்  எப்படித் தானே வலிய நாடி வந்து மாந்தரை ஆட்கொள்கிறான் என்பது ஒருபக்கமும், நான்என்ற அகம்பாவ உணர்வு கொண்டோரிடமிருந்து அவர்களுடைய அகந்தையைக் கொய்து, அவர்க்கு அருள் புரிய பெருமானது மேன்மை ஒருபக்கமுமாகச் சமத்காரவல்லியின் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்ததை வெளிப்படுத்துமாறு அமைகின்றன அவள் தொடங்கும் பாடலின் முதல் இரு அடிகள்:
இரத்தற் குகந்ததென ஏடமரும் வேதனது
சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லும்காண் அம்மானை
சூரவல்லி! முன்பொரு காலத்தில் ஆதியந்தமற்ற எங்கள் சிவபெருமானின் முடியைத் தான் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடிய தாமரை மலரில் அமர்ந்து மறைகள் புகலும் பிரமதேவன், தன் வாயால் சிவனார் முடியைக் கண்டதாகப் பொய் வார்த்தை உரைத்த கதை உனக்குத் தெரிந்திருக்குமல்லவா?

பிரமன் அப்படிச் செய்தது தனது இயலாமையை ஒப்புக்கொள்ளாத அகங்காரத்தினால் அன்றோ?

இதை உணர்ந்த எம் ஈசன், தனது சிரத்தைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்தான். பின்னர், கொய்த அந்த தலையின் ஓட்டைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகத் தான் உண்பதற்கான உணவை இரந்து பெறப் பயன்படுத்தினான்.

இவ்வாறாகச் செய்ததன் மூலம், தான் எல்லாம் வல்ல இறைவன் என்ற செருக்கு ஒருதுளியும் தனக்கு இல்லாமல் இருப்பதையும், தன் அன்பர்களிடம் அகங்காரம் துளியேனும் இருந்தாலும் அதை அழித்து அருள்புரிவான் என்பதையும் உலகிற்கு விளக்கினான் எம் ஐயன். இது எத்துணைப் பெரிய செயல்!என்று விளக்கம் தந்த சமத்காரவல்லி தன் தோழியின் பின்னூட்டத்தை எதிர்பார்த்து நிறுத்தினாள்.   
தோழிக்குச் சும்மாவா வைத்தார்கள் சூரவல்லி என்ற பெயரை?

ஒருகணம் கூடத் தாமதியாமல் தன் அறிவின் சூரம் விளங்குமாறு, ஒரு கொக்கிப்பிடிக் கேள்வியைத் தொடுக்கிறாள் அவள்:
சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லுவரே ஆமாயின்
சிரம்குவிக்க அஞ்சுவரோ சேவிப்போர் அம்மானை? 
“ ‘நன்றாயிருக்குது நியாயம், சேலையில் இருக்குது சாயம்என்பது போல உங்கள் சிவனுடைய பெருமையைச் சொல்ல வந்து விட்டாயே!
வீடு வீடாகப் பிச்சையெடுப்பவர் தன் கையில் ஒருவரது தலையைக் கொய்து எடுத்த மண்டையோட்டை ஏந்தி வரும் அழகை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்!
(இந்த இடத்தை ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ஸ்ரீரஞ்சனி ராகக் கிருதி ஒன்றின் ( http://www.raaga.com/player4/id=58890&mode=100&rand=0.6880476248378058 ) பல்லவியைப் போலப் பாடி அபிநயம் செய்கிறாள்).
இப்படிப்பட்ட திருக்கோலம் பூண்டவரை அணுகித் தங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்க எந்த அடியாருக்குத் தைரியம் வரும்?
வணங்கி எழுந்தபின் தங்கள் தலை தம் உடலோடு ஒட்டியிராமல் உன் ஐயன் கையில் ஒட்டிக்கொள்ளுமோ என்று அவர்கள் அஞ்சாரோ?” என்று தன் கேள்விக்கு விளக்கமும் தந்த சூரவல்லியை அன்பும் பரிதாப உணர்வும் கலந்த பார்வையோடு நோக்கிய சமத்காரவல்லி, வழக்கம்போலத் தன் சிலேடைச் சாமர்த்தியமும் பொருள் செறிவும் கொண்ட அம்மானைப் பாடலின் இறுதியடியைப் பாடினாள்:
சிரத்தையுடை யோர்க்குரிய சீர்தருவார் அம்மானை!
அம்மா சூரவல்லி! முதலிலேயே நான் விரிவாக விளக்கியும் அன்பே சிவமாய், அடியார்க்கு ஆரமுதாய் விளங்கும் பேரருளாளனான எங்கள் கயிலைநாதன், அவனிருக்க வேண்டிய நெஞ்சத்தில் அகந்தையை வைத்துக் கொண்டு அவனிடம் வாலாட்டுவோரின்சிரத்தைப் பறித்து அவர்களுக்கு நல்லறிவு ஊட்டும் எம்பிரான் ஆவான்.
அதேவேளையில், தன்னையே அடைக்கலமாய்க் கொண்டு அவனை அணுகி, அவனுக்குச் சேவை செய்யும் வாய்ப்புப் பெறுவதற்காகத் தலை சாய்த்துப் பணிவோரின் பக்தி சிரத்தையைப் போற்றும் பெம்மானும் அவனே ஆவான்.
ஆகையால் அவ்வாறு தன்னிடம் அளவிலா அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிரத்தை கொண்டு தங்கள் தலைகலைத் தாழ்த்துபவர்க்கு, அவர்கள் இகத்திலும் பரத்திலும் தலைமைப் பதம் பெருமாறு சீரும் சிறப்பும் நல்குவான் என்று புரிந்து கொண்டு இனிமேலாவது என்னுடன் அவன் புகழைச் சேர்ந்து பாட வாராயோடீ?” என்று கேட்டாள்சமத்காரவல்லி.
அவள் குரலில் இருந்த குழைவும் சிரத்தையும் சூரவல்லியின் மனத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. தோழி சொல்வது மெய்தான்.
இனிமேலாவது குதர்க்கமாய்க் கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும்என்று அவள் நினைத்ததின் முகப் பிரதிபலிப்பைச் சமத்காரவல்லி கவனிக்கத் தவறவில்லை.
இதன் விளைவை இனிவரும் அம்மானைப் பாடல்களில் நாம் காண வாய்ப்பிருக்கிறதா என்று அவனுக்குத் தான் தெரியும்.
இப்போது முழுப்பாடலையும் சேர்த்துப் படிப்போம்:
இரத்தற் குகந்ததென ஏடமரும் வேதனது
சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லும்காண் அம்மானை
சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லுவரே ஆமாயின்
சிரம்குவிக்க அஞ்சுவரோ சேவிப்போர் அம்மானை? 
சிரத்தையுடை யோர்க்குரிய சீர்தருவார் அம்மானை!

(ஏடு அமர் வேதன் = தாமரைப் பூவிதழின் மேல் அமர்ந்து மறைகளை ஓதும் பிரமதேவன்.

சிரத்தை=  அன்பு, முதன்மை, நம்பிக்கை, விசுவாசம், ஊற்றம்) 
----------------------------------------------------------------------------------------------------------


10.  மண்ணும் பெண்ணும்
நம் அருமை அம்மானைப் பெண்ணான சமத்காரவல்லிக்குக் கயிலாய நாதனின் நினைவும் அவன் நிகழ்த்திய அருட்செயல்களும் சதா சர்வகாலமும் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்குமெனத் தோன்றுகிறது.

அத்தோடு, அவ்விறைவனை வஞ்சப் புகழ்ச்சி கலந்த அம்மானைப் பாடல்களால் வழுத்திப் பிறரோடு தன் இறையுணர்வைப் பகிர்ந்து கொள்வதிலும் அவளுக்கு மிகுந்த நாட்டமுண்டென்றும் தெரிகிறது.

இவற்றின் விளைவாகவும், இயற்கையாகவே தமிழில் அவளுக்கிருந்த தேர்ச்சியாலும் அவள் வாயில் அம்மானைப் பாடல்கள் வற்றாத சுனைபோல ஊறிக்கொண்டிருந்தன.

தன் தோழி சூரவல்லியோடு அவள் ஆடும் இன்றைய அம்மானை ஆட்டத்தில் என்ன பாடவிருக்கிறாள் என்பதை நாம் விரைந்து சென்று கேட்கலாம், வாருங்கள்!
ஒரு நிமிடம் கண்களை மூடித் தென்னாடுடைய சிவனைத் தியானம் செய்து தன் பாடலைத் தொடங்குகின்றாள் சமத்காரவல்லி.

முதல் இரு அடிகளில் நம் ஐயன் ஆலவாய்த் திருநகரில் நிகழ்த்திய அற்புதத் திருவிளையாடல்களில் ஒன்றைக் குறிப்பிடுகிறாள்:
விண்ணவரும் விண்டறியான் வேண்டியொரு பிட்டுக்கு
மண்தலைமேல் தான்சுமந்தும் வாடான்காண் அம்மானை
என் அருமைத் தோழியே! பார்வைக் கெளியனாய்த் தோன்றும் எங்கள் சிவபெருமான் உண்மையில் இடம், பொருள், காலம் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பரமன் ஆவான்.
தாம் பூவுலகில் ஆற்றிய நற்செயல்களின் பயனாகத் தேவர்கள், கந்தருவர் போன்றோர் விண்ணுலகில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் தகுதி பெற்று, தங்கள் நல்வினைப் பயன் முடிந்ததும் மீண்டும் மண்ணுலகிற்குத் திரும்பி, பிறந்து இறக்கும் சுழற்சியில் அகப்படுவார்கள்.
அத்தகையோரால், மெய்ஞ்ஞானம் உடையர்களால் மட்டுமே அறியப்படும் எங்கள் பெருமான் ஒருபோதும் முழுமையாக அறியப்பட மாட்டான்.
ஆனால், இந்த மண்ணுலகில் அவனைத் தம் உள்ளத்தில் சதா சர்வகாலமும் நிறுத்தி, சொல்லாலும் செயலாலும் அவனை வழிபடும் அன்பர்களுக்கு மிகவும் எளியவனாய் அவன் இருந்து அவர்களைச் சிவபதத்திற்கு இட்டுச் செல்வான்.
இதை எல்லோரும் உணர்வதற்காக எம் இறைவன் திருஆலவாய் நகரில் சுந்தர பாண்டியனாக உருக்கொண்டு, ஒன்றல்ல, இரண்டல்ல அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நடத்திக் காட்டியுள்ளான்.
அவற்றுள், வந்தி என்னும் ஏழை மூதாட்டிக்கு உதவி செய்வதற்காக, ’விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம்கொண்ட நம் சிவபிரான் ஒரு கூலியாளாக வேடங்கொண்டு தன் தலையில் வைகையாற்று மண்ணைச் சுமந்த திருவிளையாடல் ஒரு தனிச் சிறப்புக் கொண்டது. 
பேருக்குக் கூலியாள் என்று சொல்லிக் கொண்டு வந்தானே ஒழிய, உருப்படியாக ஒரு வேலையும் செய்யாமல் வந்திக் கிழவியிடம் அவள் பிழைப்புக்காகச் செய்து விற்கும் பிட்டைக் கூலியாகக் கேட்டு  வாரி வாரி உண்டு பொழுதைப் போக்கியதும், அதைக் கேட்ட பாண்டிய மன்னன் தன் கைப்பிரம்பால் நம் போலிக்கூலியின் முதுகில் அடித்ததும், அந்த அடி அவனையும் வந்தியையையும் தவிர உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகள் பேரிலும் விழுந்ததும் உனக்குத் தெரியுமென நினைக்கிறேன்.
இந்த மாதிரி, வேலை செய்தபோதும் பிரம்படி வாங்கிய போதும் தன் மேனி வாட்டமடையாமல் எவரையேனும் நீ கண்டதுண்டோ?” என்ற கேள்வியுடன் பாடல் விளக்கத்தைக் கூறி நிறுத்துகிறாள் சமத்காரவல்லி.
(இப்படி இவள் விளக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அம்மானை ஆட்டம் சூரவல்லியின் கைக்குப் போய் மீண்டும் சமத்காரவல்லியிடம் திரும்புகிறது.)
இப்போது, சூரவல்லி தன் கேள்வியைத் தொடுக்க வேண்டிய நேரம்.  

என் அன்புச் சினேகிதியே! சிவனாரின் அருள் தன்மை பற்றி நீ சொன்னதை யெல்லாம் கேட்டு என் உடல் புல்லரிக்கிறது. எனினும், நீ ஒரு விஷயத்தை மறந்து விட்டாயே?

கங்கைவார் சடை கரந்தான்என்று நாயன்மார் போற்றும் ஐயன் மண் கூடையைச் சுமப்பதற்காகத் தன் சடையையே ஒரு சும்மாடு போலச் சுற்றிக் கட்டி அதன் மேல் மண்ணைத் தூக்கிச் செல்லுகையில், அந்தச் சடைக்குள் எப்போதும் ஓடியாடி அலையும் கங்கைப் பெண்ணுக்கு அந்தச் சுமையால் மிக்க உடல் வருத்தம் உண்டாகியிருக்காதோ? அதைப் பற்றி நீ கருதவில்லையா?” என்ற பொருள் கொண்ட கீழ்க்கண்ட அடிகளைச் சூரவல்லி பாடலானாள்:
மண்தலைமேல் தான்சுமந்தும் வாடானே ஆயிடினும்
அண்ணல்சடைப் பெண்துயரில் ஆழாளோ அம்மானை?
நாம் இதுவரை கண்ட கிண்டல் கலந்த கேள்விகள் போலல்லாமல் இப்போது சூரவல்லியின் வினாவில் ஒரு மெய்யான அக்கறை தொனிப்பதை அவள் குரலிலிருந்து நாம் உணர்கிறோம்.

சென்ற அம்மானைப் பாடலின் இறுதியில், பாடல்நல்லூர் வீதியில் ஆடலரசன் அம்பிகையுடன் ஊர்வலம் வருவது அவன் தன் அடியாரை ஆட்கொண்டு அருளுதற்காகவே என்று சமத்காரவல்லி சொன்ன விளக்கமும் அவளுடைய இறையுணர்வும் அம்மானைத் தோழியான சூரவல்லியின் உள்ளே பதிந்து ஒரு வித நெகிழ்ச்சியை உண்டாக்கியது பற்றிக் குறிப்பிட்டோம்.

அதன் விளைவு தானோ இது? இதுவரை எதிராட்டத்துடன் கேலிமிகுந்த எதிர்வாதமும் புரிந்து வந்த தன் தோழி இப்போது இனிய குரலில் அன்பு கலந்த உண்மை அக்கறையோடு கேட்பதைக் கண்ட சமத்காரவல்லிக்குப் பேரானந்தம் உண்டாகிறது.

அதை உடனே வெளிக்காட்டாமல் தன் பதிலை அம்மானைப் பாடலின் இறுதியடியில் அவள் தருகிறாள்:
பெண்ணவள்தன் புக்ககத்தில் பேரெடுப்பாள் அம்மானை!
என் அருமைச் சூரவல்லி! அழகான பொருத்தமான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறாய். எனினும் நீ சற்றுச் சிந்தித்திருந்தால் உனக்கே விடை தெரிந்திருக்கும்.

பிரமனின் உலகில் தோன்றிய கங்கையன்னை பகீரதனின் கடுந்தவத்தின் விளைவால் கீழே இறங்கி வருகையில் சிவபிரானின் சடாமுடியில் தங்கியதும் பின்னர் அவரது கருணையால் மண்ணுலகத்திற்கு வந்ததும் பற்றிய கதையை நாம் முன்னமே பேசியுள்ளோம்.

இப்படியாக, மற்ற பெண்களைப் போலன்றி, பாகீரதிக்கு இரண்டு புக்ககங்கள் உண்டு என்று தெரிந்து கொள்கிறோம்.

புகுந்த இடத்தில் நல்ல பேரெடுக்க எந்தப் பெண்ணுக்குத்தான் ஆசையிருக்காது? கஷ்டமோ நஷ்டமோ எதுவாயினும் பொறுத்துக் கொண்டு அனுசரணையாகப் போவதில் அல்லவா பெண்ணின் பெருமை ஒளி விடுகிறது?

அதனால் தான், பிட்டுக்காகச் சிவன் சுமந்த மண்ணின் சுமையத் தான் புகுந்த இடமாகிய சடாமுடியில் அவள் மலர்ந்த முகத்துடன் பொறுத்துக் கொண்டாள்.

மேலும், அந்த மண்ணே தனது இன்னொரு புக்ககமாக இருப்பதால் ஒரு கல்லில் இருமாங்காய்என்ற கதையாகத் தன் பொறுமையான செயலால் இரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் நல்ல பேரெடுத்து விட்டாள் பார்த்தாயா?“
இப்படிச் சமத்காரவல்லி தன் சாமர்த்தியத்தால் கதையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டதைச் சூரவல்லி இரசித்துக் கைகொட்டுகிறாள்.

மகிழ்ச்சியோடு இருக்கும் அவர்களை அத்தோடு விட்டு மெல்ல நழுவி நாம் நம் இடத்திற்குத் திரும்பும் முன் முழுப்பாடலையும் நினைவு கூருவோம்:

விண்ணவரும் விண்டறியான் வேண்டியொரு பிட்டுக்கு
மண்தலைமேல் தான்சுமந்தும் வாடான்காண்  அம்மானை 
மண்தலைமேல் தான்சுமந்தும் வாடானே ஆயிடினும்
அண்ணல்சடைப் பெண்துயரில் ஆழாளோ அம்மானை?
பெண்ணவள்தன் புக்ககத்தில் பேரெடுப்பாள் அம்மானை!

----------------------------------------------------------------------------------------------------------

  
11. யாரே காண்பார்?
கடந்த இரண்டு வாரங்களாகப் பாடல்நல்லூர் விழாக்கோலம் பூண்டு அமர்க்களப்பட்டது அம்மானை வாசகர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

அவ்வூர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடக்கும் பெருவிழாவின் இறுதிக் கொண்டாட்டமாக அருள்பொழிகண்ணி அம்மைக்கும் மாதொரு பாகனாருக்கும் பௌர்ணமி நாளில் திருமண வைபவம் அமையும்.

அதைக்காண அண்டைக் கிராமங்களான கூத்தநல்லூர், ஆற்றூர், சோலையூர், பழனக்குடில் ஆகியவற்றிலிருந்தும் மக்கள் திரளாக வருவார்கள்.

திருமணம் என்ற நிகழ்ச்சி வழியாக அகிலப் பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாக்களாக இறைவனும் இறைவியும் ஒன்று சேரும் தத்துவத்தை ஆலயத்தில் நடக்கும் வழிபாட்டு முறைகளும் பெரியோர்களின் சொற்பொழிவுகளும் மக்களுக்கு விளக்கும்.

அந்த வேளையில், நம் அம்மானைப் பெண்களான சமத்காரவல்லியும் சூரவல்லியும் தம் தோழியரோடு பற்பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். அந்தக் காரணத்தால், வழக்கமாக அவர்கள் வீடுகளில் நாம் காணும் திண்ணை மேடை அம்மானை ஆட்டமும் பாடலும் சென்ற பதினைந்து நாட்களாக நமக்குக் கிட்டவில்லை.

இன்று மீண்டும் அவர்கள் தொடர்வதாகக் காதில் விழுந்ததால் நாமும் அங்குச் சென்று வழக்கம் போல ஒட்டுக் கேட்கத் தயாராகிறோம்.

பற்றற்ற வாழ்வின் பெருமையை விளக்கும் சிவபெருமானின் குணநலன்களில் பெரும் ஈடுபாடு கொண்ட சமத்காரவல்லி, இன்று கூத்தப்பெருமானின் ஆட்டத்தில் பொதிந்துள்ள தத்துவத்தில் மனத்தைச் செலுத்தியவளாக, அம்மானைப் பாடலைத் தொடங்குகிறாள்:
ஊரெல்லாம் தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்
சீராய்ச் சுடுகாட்டைச் சேர்ந்திடுவார் அம்மானை
ஒருபுறம், நாம் ஆலய விழாவில் கண்டபடி, இறைவியை மணம்புரிந்து உலகோர்க்கு அருள் வழங்கும் ஐயன், மறுபுறம் அதற்கு நேர்மாறான இன்னொரு கோலத்தையும் கொள்வான்.

தானே அனைத்துமாய் நிற்கும் ஆனந்த நிலையைக் காட்டும் உன்மத்தக் கோலம் அது.

படைக்கப்பட்ட யாவும் தன்னுள் அடங்கி இருப்பதையும், அவற்றைத் தோன்றல்-மறைதல் என்னும் தொடர் நாடகத்தில் தான் மாட்டிவைக்கும் மாயா ஜாலத்தையும், உன்மத்தக் கோலம் பூண்ட இறைவன் ஒரு மகிழ்ச்சி நடனமாக ஆடிக் காண்பிப்பான்.

அந்த ஆட்டத்திற்காக அவன் தேர்ந்தெடுக்கும் களம் மக்கள் நடமாட்டமற்ற சுடுகாடு. ஆசாபாசங்களைச் சுட்டெரித்த ஞானியர் உள்ளத்தைக் குறிக்கும் அற்புதத் தலம் அது.

அவர் தேர்ந்தெடுத்த நேரமோ மாயையின் வசத்தால் புலன்வழிப் பற்றில் சிக்கி, அறியாமை என்னும் தூக்கத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கும் நேரம்.என்று பொருள் விளக்கிய சமத்காரவல்லி,

என் அன்புத் தோழியே! இத்தகைய நம் இறையின் இந்த ஆட்டத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்ற கேள்வியுடன்  சூரவல்லியை நோக்குகிறாள்.
உடனே, சூரவல்லி தன் வகைக்கான அம்மானை அடிகளில் கீழ்க்காணும் வினாவை விடுக்கிறாள்:
சீராய்ச் சுடுகாடு சேர்வாரே ஆமாகில்
யார்காண்பார் ஆங்கவர்தம் ஆட்டத்தை அம்மானை?”
எளிதில் விளங்காத ஒரு புதிராகத் தோன்றும் சிவபிரானது இடுகாட்டு ஆட்டம் பற்றி நீ சொல்லும் தத்துவ விளக்கமெல்லாம் கேட்க  நன்றாகத் தான் இருக்கிறது.

ஆனால் அவர் தனது அற்புத நடனத்திற்கெனத் தேர்ந்தெடுத்த இடத்தின் பொருத்தம் தான் எனக்கு இன்னும் புரியாத ஒன்றாய் இருக்கிறது.

நாட்டியம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இரசிக்க மக்கள் கூட்டம் தேவையான ஒரு அம்சமல்லவா?

இவரானால், மக்களெல்லாம் செத்துக் கிடக்கும் இடமான சுடுகாட்டில், அதிலும் பகல் வேளையின் வந்திருந்த ஓரிரு உறவினர் கூட உறங்கச் செல்லும் நள்ளிரவு நேரத்தில், நடனமாடினால் யார்தாம் அதனைக் காணல் ஆகும்?” என்று கேட்ட சூரவல்லியின் அங்கதம் தொனிக்கும் குரல், நாம் சென்ற தடவை அவளிடம் கண்ட மனமாற்றம், அதாவது அவள் சிவனைக் கேலி செய்வதை விடுத்து அவனிடம் நாட்டம் கொண்டது- தாற்காலிகமானதோ என்று ஐயம் கொள்ள வைக்கிறது.

சமத்காரவல்லி அவ்வாறு நினைக்கிறாளா என்பது அவள் தரும் விடையிலிருந்து நமக்குத் தெரிவதும் இல்லை:
சூரவல்லி, கூத்தரசனின் இடுகாட்டு ஆடலை யார் காண்பார் என்றா கேட்டாய்? இதோ சொல்கிறேன்,
ஊரெல்லாம் காணும் உடல்விடும்போ(து) அம்மானை! 
ஆம், இந்த ஊரிலுள்ள எல்லோரும், ஒருவர் பாக்கியின்றி, காலம் காலமாக என் ஈசனின் திருநடனத்தைக் கண்டிருக்கிறார்கள், காணவும் போகிறார்கள். எப்படி, என்று தெரியுமா?
அவர்கள் இந்த ஊன உடலை விட்டேகும் இடமான மயானத்தில், எம் பிரான் அவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழலிலிருந்து உய்யுமாறு செய்யத் திருவுள்ளம் கொண்டு தனது நடனத்தை உடல் மறைந்த நிலையில் சூக்கும சரீரம் பெறும் ஜீவர்களுக்கும் பேயாய்த் திரியும் ஆவிகளுக்கும் காட்டி அருள்வான்.
அந்த அளவிலாக் கருணையை உள்வாங்கிக் கொண்ட சீவர்கள் சிவபதத்தை அடைவார்கள்.
எனவே ஐயனின் திருநடம் காண ஆளில்லையே என்று நீ வருந்த வேண்டிய தேவையே இல்லையடி!என்று உற்சாகமும் உணர்ச்சியும் கலந்த குரலில் சமத்காரவல்லி கூறி அம்மானை ஆட்டத்தை முடிக்கிறாள்.
நாம்  முழுப்பாடலையும் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்து சமத்காரவல்லி எளிதாக அள்ளி வீசிய தத்துவக் கருத்துக்களின் ஆழத்தை அசைபோட்டவாறே அவ்விடத்தை விட்டுத் திரும்புகிறோம்.
உடல்விடும்போது காண்பார்என்பதற்கு, பஞ்சபூதங்களால் ஆகிய உடம்பை மெய்யென்று கொள்ளும் நினைப்பை விட்டுத் தமது உண்மைச் சொருபத்தை உணரும் வேளையில் சிவப்பிரம்மத்தைத் தம்முள் காண்பார் என்ற பொருளும் நமக்கு உறைக்கிறது:  
ஊரெல்லாம் தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்
சீராய்ச் சுடுகாட்டைச் சேர்ந்திடுவார் அம்மானை;
சீராய்ச் சுடுகாடு சேர்வாரே ஆமாகில்
யார்காண்பார் ஆங்கவர்தம் ஆட்டத்தை அம்மானை?
ஊரெல்லாம் காணும் உடல்விடும்போ(து) அம்மானை!
----------------------------------------------------------------------------------------------------------

12.   காயமில்லார்
சென்ற அம்மானை ஆட்டத்தை நாம் கண்டு இரசித்து வீட்டை நோக்கித் திரும்ப இருக்கும் வேளையில், மீண்டும் சமத்காரவல்லியின் கணீர்க் குரல் நம் காதில் விழுகிறது.
ஓகோ, இன்று இரட்டை ஆட்டமாஎன்று நினைத்தவாறே நாமும் ஓரமாக நின்று புதிய பாட்டைக் கேட்கத் தயார் ஆகிறோம்.
அடியே, சூரவல்லி! ஆள் நடமாட்டம் அற்ற சுடுகாட்டில் நடம் புரியும் நம் ஆண்டவனைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன், கேட்பாயா?
இந்த உலகில் மனிதர் தங்கள் ஆவி பிரிந்து உடல் நெருப்புக் கிறையாகும் தகன பூமி சிவபெருமானுடைய கால தாண்டவத்தின் பொருளை அவர்களுக்கு உணர்த்தும் புண்ணிய பூமியென்று  முன்பு சொன்னேனல்லவா?
அத்தோடு, எம்பிரான் அந்த இடுகாட்டில் அவர் தமக்குத் துணையாக அங்குக் குடியிருக்கும் பேய்களும் பூதங்களையும் கூடச் சேர்த்து கொண்டு பித்துப் பிடித்தாற்போல, ஆனந்தக் கூத்தாடவும் செய்வார்என்று கூறியவாறு தன் பாடலைத் தொடங்குகிறாள் சமத்காரவல்லி:
பேய்களொடும் பூதமொடும் பித்தனைப்போல் நடமாடித்
தீயெரியும் காட்டில் திரியுங்காண் அம்மானை
இப்போது சூரவல்லி தனது கேள்வியைத் தொடுக்க வேண்டிய நேரம். சற்று யோசித்தபின் அவள் கீழ்க்கண்ட பாடல் அடிகளில் தன் வினாவைத் தெரிவிக்கிறாள்:
தீயெரியும் காட்டில் திரியுமே ஆமாகில்
காயமெதும் இல்லாதார் காத்திடுமோ அம்மானை?
சுற்றிலும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் இடமான சுடுகாட்டில் கால் வைத்து நடந்தாலே தீ சுட்டுவிட வாய்ப்பிருக்கையில், உன் சிவனார் தா, தைஎன்று உன்மத்தன் போல் கூத்தாடிக் கொண்டு திரிவாராகில், ஒரு வேளை இல்லாவிடிலும் இன்னொரு வேளை அந்த அழல் அவரைச் சுட்டுக் காய்த்து விடாதோ?

அவ்வாறு நேர்ந்துவிடா வண்ணம் அவரை அன்போடு கவனித்துக் கொள்ள அந்தக் காட்டுப்புலத்தில் யாரம்மா அவருக்கு இருக்கிறார்?”
நாம் முன்பு சொன்னபடி, சூரவல்லி இந்தக் கேள்வியை சமத்காரவல்லியை மடக்கும் நோக்கத்தில் இடக்காகக் கேட்டாளா அல்லது, சிவபெருமான் பேரில் தனக்குப் புதிதாகத் தோன்றிய உண்மையான அக்கறையால் கேட்டாளா என்பது இப்போதும் நமக்குச் சரியாகப் புலப்படுவதில்லை.
அதைப் பற்றி மேலும் அலட்டிக்கொள்ளாமல் சமத்காரவல்லியின் வழக்கமான சமத்கார பதிலை எதிர்பார்த்து அவளைக் கூர்ந்து நோக்குகிறோம். 
வில்லிலிருந்து விடுபட்டு விரையும் அம்பைப் போல் அவளிடமிருந்து வருகிறது பாடலின் இறுதி அடி:
தாயெனவோர் பெண்அவரைத் தான்நோக்கும் அம்மானை!
என் அன்புத் தோழியே! எம்பிரானைப் பற்றிய உன் கவலைக்கு இடமே இல்லாமல் அவருடைய தாயாரே அந்த மயான பூமியில் அல்லும் பகலும் அவரை சதா பார்த்துக்கொண்டும் அவரது திருநடனத்தைக் கண்டு களித்துக் கொண்டும் இருக்கிறார். மேலும், ஐயனின் அந்த அன்னை தனக்கும் ஒரு காயம் இல்லாமல் இருப்பவர்
இதைக் கேட்ட சூரவல்லிக்கு ஏற்பட்ட மனக் குழப்பத்தை அவள் முகம் வெள்ளிடை மலையாய்த் தெள்ளெனக் காட்டுவதை நாம் பார்த்தும் பார்க்காதது போல் நடிக்கிறோம்.

தன் குழப்பத்தை வெளியிடும் வகையில் அவள்: 'இதென்னடி, யாரும் கேட்டிராத புதிய கதையாய் இருக்கிறது?

தந்தைதாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா?” என்ற கோபாலகிருஷ்ணபாரதியின் பாடலைச் சுவைத்து ஷண்முகப்ரியா ராகத்தில் அடிக்கடி பாடிக்கொண்டு,  தாயும் தந்தையும் இல்லாத  அனாதியான பெருமான் என்று அடிக்கடி நீ பீற்றிக் கொள்ளும் அரனுக்கு ஒரு தாயாம், அவள் சுடுகாட்டில் அவருடன் இருப்பாளாம், யாருக்குக் காது குத்துகிறாய் அம்மா நீ?” என்று சமத்கார வல்லியைக் கேட்கிறாள்.
ஐயோ! உன் அறியாமைக்குக் குளத்தாமை கூட ஈடாகாது, போ!

உலகத்தாரால் பெருமதிப்போடு காரைக்கால் அம்மை என்று அழைக்கப்படும் புனிதவதியாரின் சரித்திரத்தை இந்தப் பாடல்நல்லூரில் ஒரு குழந்தை கூட அறியுமே?

பிறர் பார்வையிலிருந்து மறைவதற்காகத் தன் மனித உடலை நீக்கிப் பேயுருவம் தருமாறு சிவபிரானிடம் வேண்டிக்கொண்ட அப்பெருமாட்டி, ஐயனைப் பார்க்கக் கயிலாய மலையேறி வருகையில், தூய தாயன்பின் வடிவமாகத் திகழ்ந்த அவரைத் தம் அன்னையாகக் கருதி என் அம்மையே, வருக! என்று சிவனார் அழைத்து, உடன் அமர்த்தி, திருவாலங்காடு திருத்தலத்தில், இரத்தின சபையில், காலை வான் நோக்கி உயர்த்தி நடமாடும் தம் வடிவத்தைக் காட்டி அருளியதும் சதா சர்வகாலமும் தன் காயம் (உடல்) இல்லாத பேயுருவில் அவ்வம்மை மகாதேவன் அருகிலே இருந்து அவரை நோக்கிக் கொண்டிருப்பதையும் இப்போதாவது தெரிந்துகொள்” என்று பரிவோடு கூறிய சமத்காரவல்லியின் கண்ணில் நீர் துளிர்ப்பதையும் அவள் வாய் காரைக்காலம்மையாரின் மூத்த திருப்பதிகத்தைக் கூறத் தொடங்குவதையும் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தவாறே  நாமும் அவ்விடத்தை விட்டு அகல்கிறோம்.
முழுப்பாடல்:
பேய்களொடும் பூதமொடும் பித்தனைப்போல் நடமாடித்
தீயெரியும் காட்டில் திரியுங்காண் அம்மானை
தீயெரியும் காட்டில் திரியுமே ஆமாகில்
காயமெதும் இல்லாதார் காத்திடுமோ அம்மானை?
தாயெனவோர் பெண்அவரைத் தான்நோக்கும் அம்மானை!

-----------------------------------------------------------------------------------------------------------

13.  காட்டில் நடமாட்டம்
அம்மானைப் பெண்களைப் பார்த்து அவர்கள் ஆட்டத்தையும் அதனூடே இயற்றும் பாட்டையும் நாம் கேட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன என்ற நினைப்பு திடீரென என் மனத்தில் தோன்றியதால் பாடல்நல்லூரை நோக்கி உடனே கிளம்பினேன்.

போகும் வழியில் தொலைக் காட்சியிலும் செய்தித் தாள்களிலும் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து விளையாட்டு பற்றிய  தகவல்கள் அமர்க்களமாக அடிபட்டுக் கொண்டிருப்பதை எண்ணியவாறே சென்றேன்.

என்னைக் கண்டதும், ஆட்டத்தில் பாட்டிலும்  தமக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் இணைபிரியாத நட்புடன் விளங்கும் சமத்காரவல்லியும் சூரவல்லியும்  புன்னகையுடன்  வரவேற்று அவர்கள் அம்மானை ஆடும் தளமாகிய சமத்காரவல்லியின் வீட்டுத் திண்ணையில் அமரும்படி செய்கை காட்டினார்கள்.  

முன் நாட்களில் நான் மறைந்திருந்து ஆட்டத்தைப் பார்த்து உங்களுக்குத் தகவல் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்தும் கவனியாதது போலிருந்த அந்த அம்மானைப் பெண்கள் இப்போது என்னை அதிகாரபூர்வமாக அங்கீகாரம் செய்து விட்டதை எண்ணி  நான் அகமகிழ்ந்தேன்.

அத்தோடு என் கண்ணையும் காதையும் தீட்டிக்கொண்டு அவர்கள் தொடங்கவிருக்கும் ஆடல் பாடலைக்  கவனிக்கலானேன். 

வழக்கம்போல, கணீரென்ற இனிய குரலில், சிவபெருமான் பெருமை பேசும் அம்மானைப் பாடல் ஒன்றின் முதலிரு அடிகளை இயற்றிப் பாடியவாறே சமத்காரவல்லி ஆட்டத்தைத் தொடங்கினாள்:
காண்பரொரு கால்மதுரை மன்னரென வேறொருகால்
சேண்தில்லைக் காட்டில் திரிவார்காண் அம்மானை
சூரவல்லி! இவ்வுலகில் வாழும் தம் அன்பர்கள் தம்மைக் கண்டு தொழுது இன்பம் துய்த்துப் பல பேறுகள் அடைவதற்காகக் கைலாயத்தை விட்டுப் பல திருத்தலங்களில் காட்சிதரும் எங்கள் ஐயனின் கருணையை எப்படி நான் எடுத்துரைப்பேனடி?
ஒவ்வொரு தலத்திலும் தமது சிறப்பை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட வேடங்கள் தாம் எத்தனை, எத்தனை!
பல வேளைகளில் தாம் பூண்ட  கோலங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதையும் கூடப் பொருட்படுத்த மாட்டார் எங்கள் அருட்கடல்.
எப்படி என்று  விளக்குகிறேன் கேள்.
கடந்த சித்திரைத் திங்களில் நாம் பாடி மகிழ்ந்தவாறு மதுரையம்பதியில் அன்னை தடாதகைப் பிராட்டியின் கணவராய் அரியணையில் அரசர் கோலத்தில் அற்புதமாகக் காட்சி தரும் அண்ணல் அவரைப் போற்றிப் பாடும் புலவர்களுக்கும் அடியார்களுக்கும் பொன்னும் பொருளும் அருளி அவர்கள் இகத்திலும் பரத்திலும் சுகம் பெறச் செய்வார்.
இத்தகைய நம் ஈசனார், கூடல்மாநகருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள தில்லைமரங்கள் நிறைந்த காடுகளை உடையதால் தில்லை மாநகர் என்று பெயர்படைத்த திருத்தலத்தில் எல்லோரும் கூடும் பொதுவான இடத்தில், இடையறாது ஓடியும் சுழன்றும் கூத்தாடிக் கொண்டிருக்கும் கோலத்தை மேற்கொள்வார்.
தில்லை மூவாயிரவர் என்னும் அந்தணர்கள் ஓதும் வேத மந்திரங்களாலும், சிவநெறிச் செல்வர்கள் ஓதும் திருமுறைகளாலும் சதா துதிக்கப் படுபவராகிய தில்லையம்பலத்தார் தம்மைத் தொழுவோர்க்கு அவர் தமது ஆட்டத்தின் உட்பொருளை உணர்த்தி, வீட்டுப் பேற்றை அளிப்பார்“ - என்று கூறி நிறுத்திய சமத்காரவல்லியை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அம்மானைக் காய்களை அவளிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட சூரவல்லி தன் வகைக்குப் பாடலின் அடுத்த இரு அடிகளை இப்படி அமைத்தாள்:
சேண்தில்லைக் காட்டில் திரிவாரே ஆமாகில்
பூணுமுடல் தள்ளாடிப் போனதுவோ அம்மானை?
(சேண்= சேய்மை, தொலைவு)
இந்தக் கேள்வியில் பொதிந்துள்ள கேலியை மேலும் விளக்கும் வகையில்,
அம்மம்மா! உங்கள் சிவனாருக்குத் தான் என்ன அலைச்சல், என்ன அலைச்சல்! தமது அன்பர்களுக்கு அருள் செய்ய வேண்டியது நியாயமான காரியம் தான். அதற்காக இப்படியா ஒருவர் ஒருகால் அரச போகத்தை அனுபவிப்பவராகவும், மறுகணத்தில் அதை அடியோடு துறந்து ஒரு முள் நிறைந்த காட்டுப் பிரதேசத்தில் நடமாடுபவராகவும் தம்மை வருத்திக் கொள்வார்? அழகுதான் போ!
அது கிடக்க, காட்டுப் பிரதேசமாகிய அந்த தில்லையில் அலைந்து திரிவதனால் அவர் களைத்துச் சளைத்துப் போக மாட்டாரோ? சொல்லடி, என் சமத்காரத் தோழிஎன்று நீட்டி முழக்கித் தன் அம்மானைக் காய்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டு தோழியின் பக்கம் ஆட்டத்தை விட்டாள்.
நல்ல வேளை, இத்தோடு நிறுத்தினாள் இவள்! இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால்,  முந்தைய ஆட்டங்களில் தான் கேட்ட சிவனார் இரந்து ஊண் பெறுவதையும் சேர்த்துக் கூறி,  என் சிவனை இன்னும் களைத்துப் போக வைத்திருப்பாள் இவள்என்று தன் மனத்தில் எண்ணிய சமத்காரவல்லி, தோழியின் போலி அக்கறைக்கு ஏற்ற பதிலை மனத்தில் எண்ணிப் பார்த்தபின், அம்மானைக் காய்களை மேலே எறிந்தவாறு,
கானில்நட மாடுவதில் கைதேர்ந்தார் அம்மானை!
(கான் – கானகம், காடு)
என்று பாடலின் இறுதியடியை அழுத்தமாக இசைத்தாள்.
இதைக் கேட்ட தோழியின் முகத்தில் தெரிந்த குழப்பதை நீக்குவதற்காக மேல் விளக்கமும் கொடுத்தாள்:
எம் இறைவனார் பேரில் உனக்கு உள்ள அக்கறைக்கு நான் எப்படியடி நன்றி சொல்வேன்?
தில்லை மரங்கள் நிரம்பிய கானகத்தில் எம் இறைவன் அலைவதால் உடல் வாடிப் போகுமோ என்று நீ கவலையே பட வேண்டாம்!
சொல்லப் போனால், மதுரை மாநகரும் கதம்ப விருக்ஷங்கள் அடர்ந்துள்ள கதம்பவனமென்னும் காட்டுப் பிரதேசம் தான். திருமுறை தந்த அடியார்களால் பெரிதும் சிறப்பித்துப் பாடப் பெற்ற இந்த இரண்டு காட்டுத் தலங்களிலும் நடமாடுவதை எம் ஈசர் மிகவும் விரும்புபவர் என்று உனக்குத் தெரியாமலிருக்காது.
இவை போதாதென்று தினமும் நள்ளிரவு நேரத்தில், மயான பூமியாகிய சுடுகாட்டிலும் பேய்க்கணங்கள் காண நடம் ஆடுவார்.
ஆகவே காட்டில் நடமாடித் திரிவது அவருக்குக் கைவந்த கலை என்று புரிந்துகொள்.
இன்னொரு சேதியும் சொல்கிறேன் கேள்.
ஒருகணம் தில்லைத் தலத்தில் பொன் கூரை வேய்ந்த அம்பலத்தில், தம் இடது காலை உயரத் தூக்கியாடும் எம்மவர்  மற்றொருகால், கூடல் மாநகரில் மீனாக்ஷிசுந்தரர் ஆலயத்தில் உள்ள வெள்ளியம்பலத்தில், தமது வலது காலைத் தூக்கி ஆடுவார். அதற்குக் காரணம் என்ன தெரியுமா?
ஒருவகையில்  உன்னைப் போலவே ஐயன் உடல் நோவைப் பற்றிக் கவலைப்பட்ட ஒரு பாண்டிய மன்னன் என் ஐயனே! தில்லைச் சிற்றம்பலத்தில், இடது காலையே சதா தூக்கியும் வலது பாதத்தைப் பூமியில் பதித்தும் நடமாடி நடமாடி உன் இருகால்களும் சோர்வடைந்து போயிருக்கும்.
அதனால் ஒரு மாற்றத்திற்காக இந்த மதுரையில் பொன்னம்பலத்தில் கால்மாற்றி ஆடலாகாதா?” என்று மனமுருக வேண்டினான்.
அதை நிறைவேற்றவே சிவபெருமான் மதுரை வெள்ளியம்பலத்தில், ’அதிரவீசியாடிஎன்னும் திருநாமத்துடன் தமது வலது காலை உயரத் தூக்கியும் இடது பாதத்தைப் பூமியில் ஊன்றியும் ஆடுவார்.
இப்படிக் கால்மாற்றி ஆடும் ஆட்டத்தை ஆடிப் பழகிய எங்கள் அரனாரின் உடலுக்கு மதுரைக்கும் தில்லைக்குமாக நடமாடுவதால் ஒருவிதமான ஊறும் வாராது.
இவ்வாறு சமத்காரவல்லி விளக்கம் தருவதற்கும் பாடல்நல்லூர் வீடுகளில் வாசலிலும் உள்ளிலும் மாலை நேர விளக்கு வைக்கப்  பெண்டிர் வருவதற்கும் சரியாக இருந்தது.
நானும் இருட்டுவதற்குள் என் வீட்டை அடையும் நோக்கத்துடன் என் நடையைக் கட்டினேன்.
வழக்கம்போல, நடக்கையில் நான் கேட்ட அழகிய அம்மானைப் பாட்டு என் காதில் ரீங்காரமிட்டவாறு இருந்தது.
அத்தோடு, நம் இறைவனான நடராஜன் கால்களை மாற்றி மாற்றித் தன் ஆட்டத்தில் தேர்ந்தவராய் இருப்பதைக் கால்பந்து விளையாட்டுக்காரர்கள் தம் சிந்தையில் இருத்தி விளையாடினால் உலகக் கோப்பையை எளிதில் கைப்பற்றலாமே என்ற நினைப்பும்  என் மனத்தில் நிழலாடியது!


காண்பரொரு கால்மதுரை மன்னரென வேறொருகால்
சேண்தில்லைக் காட்டில் திரிவார்காண் அம்மானை
சேண்தில்லைக் காட்டில் திரிவாரே ஆமாகில்
பூணுமுடல் தள்ளாடிப் போனதுவோ அம்மானை?
கானில்நட மாடுவதில் கைதேர்ந்தார் அம்மானை!


----------------------------------------------------------------------------------------------------------


No comments: